சிற்றிலக்கிய நாடக வகைகளுள் நொண்டி நாடகம் ஒரு வகையாகும். மேடையில் தனியொரு மனிதனாகத் தோன்றும் கதைத் தலைவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நொண்டி’ எனப் பெயர் பெற்றது. இதனை ‘ஒற்றைக்கால் நாடகம்’ என்றும் அழைப்பர்.
நொண்டி நாடகத்தின் தோற்றம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு ஆகும். சாதாரண மக்களுக்காக நடத்திக்காட்டப்பெறும் வண்ணம் இந்நாடகம் மேடையில் நடித்துக்காட்டப்பட்டது. மக்களுக்கு அறவொழுக்கத்தினை வலியுறுத்துவதே இந்நாடகத்தின் நோக்கம். 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மிகவும் செல்வாக்குடன் இந்நாடகம் விளங்கியது.
நொண்டி நாடகம் இசை கலந்த இலக்கிய நாடகம் ஆகும். வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு ஆகிய பாவினங்களால் இது ஆக்கப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் மக்களிடையே வழக்கில் இருந்து வந்த வழக்குச் சொற்களைக் கொண்டு நொண்டி நாடகம் ஆக்கப்பட்டிருக்கும். இது தமிழ் நாடகப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மக்களிடையே கருத்துப்பரவுதல் செய்வதற்கு அவர்களின்
மொழியிலேயே நாடகம் ஆக்கப்பட்ட நிலையை இது உணர்த்துகிறது. மக்களின் மத்தியில் நாடகத்தின் கருத்தை எடுத்துச் சொல்லத்தக்க வகையில் நாடகம் எளிமைப்படுத்தப் பெற்றது. மக்களும் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர். இவ்வகை நாடகங்கள் வடிவமைப்பில் மக்களை வெகுவாக ஈர்த்தன.
அனைத்து வகை நொண்டி நாடகங்களும் ஒரே வகை வடிவமைப்பையே கொண்டுள்ளன. அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் இவை எளிய பாடல் வரிகளால் ஆக்கப்பட்டிருந்தன. சமுதாய அவலங்களை நகைச்சுவை மூலம் நையாண்டி (கேலி) செய்வதற்கு எளிய நடை இன்றியமையாததாகும்.







Reviews
There are no reviews yet.